திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் திருவனந்தபுரத்திலிருந்து தனி விமானம் மூலம் பெங்களூரு கொண்டு செல்லப்பட்டார். கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி தொண்டை புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் அவருக்கு ஜெர்மனியில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் பின்னர் பெங்களூரூவிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் திருவனந்தபுரத்திலுள்ள வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.
உம்மன் சாண்டிக்கு அவரது குடும்பத்தினர் சிகிச்சை அளிக்க மறுப்பதாக அவரது தம்பி அலெக்ஸ் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதை உம்மன் சாண்டி மறுத்தார். இந்நிலையில் கடந்த வாரம் அவர் திடீரென திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உம்மன் சாண்டிக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. அந்த மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று உம்மன் சாண்டி பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் அவர் கொண்டு செல்லப்பட்டார்.